விவசாய பணிக்காக பாபநாசம் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறப்பு


விவசாய பணிக்காக பாபநாசம் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Aug 2020 1:37 AM GMT (Updated: 6 Aug 2020 1:37 AM GMT)

விவசாய பணிக்காக பாபநாசம் அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நேற்று 71 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், கார் சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பரவலான மழை காரணமாக, அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாபநாசம் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

800 கன அடி தண்ணீர் திறப்பு

அதன்படி பாபநாசம் அணையில் இருந்து நேற்று 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் தெற்கு கோடை மேலழகியான், வடக்கு கோடை மேலழகியான், கன்னடியன், நதியுண்ணி ஆகிய கால்வாய்களிலும் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தொடர்ந்து 10 நாட்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஏற்கனவே பயிரிட்ட பயிர்களை காக்கவும், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடவிநயினார், கருப்பாநதி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக, தென்காசி மாவட்டம் அடவிநயினார், கருப்பாநதி அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. 132.22 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 5 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று ஒரே நாளில் கருப்பாநதியில் 6 அடி நீர்மட்டம் உயர்ந்து 48 அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

Next Story