செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை எட்டுகிறது ஒரே நாளில் 408 பேருக்கு தொற்று


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை எட்டுகிறது ஒரே நாளில் 408 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 Aug 2020 1:14 AM GMT (Updated: 7 Aug 2020 1:14 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 408 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை எட்டுகிறது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் அருள்நகர், பாரதி தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 வயதுடைய 2 சிறுவர்கள், 11 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேர், நந்திவரம் குளக்கரை பகுதியை சேர்ந்த 2 பேர், கோவிந்தராஜபுரம் 7-வது தெருவை சேர்ந்த 68 வயது முதியவர், வண்டலூர் வெங்கடேசபுரம் 10-வது தெருவை சேர்ந்த 6 வயது சிறுமி, ஒட்டேரி டி.எஸ்.நகர் பகுதியில் 54 பேரும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காந்தி நகரில் வசிக்கும் 24 வயது வாலிபர், 18 வயது வாலிபர், கம்பர் தெருவை சேர்ந்த 22 வயது இளம்பெண், 50 வயது பெண் உள்பட 23 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 897 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 284 ஆக உயர்ந்தது. 2,644 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 7 வாலிபர்கள் மற்றும் 15 வயது சிறுமி, வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆதனூர் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர், 22 வயது பெண், வரதராஜபுரம், பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், சோமங்கலம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண், செரப்பணஞ்சேரி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 336 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 7 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2,872 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 6 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 18 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 320 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 15 ஆயிரத்து 890 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 153 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

3,469 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரு நாளில் 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்தது.

Next Story