கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் சாவு ஒரேநாளில் 6,257 பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் சாவு ஒரேநாளில் 6,257 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 10:30 PM GMT (Updated: 11 Aug 2020 10:30 PM GMT)

கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 86 பேர் பலியாகி உள்ளனர். ஒரேநாளில் 6,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மட்டும் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அத்துடன் தினமும் 100 பேர் சராசரியாக கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 3 ஆயிரத்து 312 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 86 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது‘;-

6,257 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 82 ஆயிரத்து 254 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 6,257 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 88 ஆயிரத்து 511 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரத்து 599 பேர் மீண்டுள்ளனர்.

இதில், நேற்று மட்டும் 6 ஆயிரத்து 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 79 ஆயிரத்து 606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பெங்களூரு நகரில் 1,610 பேருக்கும், மைசூருவில் 238 பேருக்கும், கலபுரகியில் 156 பேருக்கும், தார்வாரில் 276 பேருக்கும், பல்லாரியில் 736 பேருக்கும், கொப்பலில் 169 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 243 பேருக்கும், பாகல்கோட்டையில் 135 பேருக்கும், உடுப்பியில் 219 பேருக்கும், உத்தரகன்னடாவில் 73 பேருக்கும், பெலகாவியில் 575 பேருக்கும், விஜயாப்புராவில் 121 பேருக்கும், துமகூருவில் 89 பேருக்கும், மண்டியாவில் 141 பேருக்கும், ராய்ச்சூரில் 201 பேருக்கும், பீதரில் 73 பேருக்கும், தாவணகெரேயில் 172 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 28 பேருக்கும், சிக்கபள்ளாப்பூரில் 33 பேருக்கும், கோலாரில் 69 பேருக்கும், குடகில் 41 பேருக்கும், சித்ரதுர்காவில் 47 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 72 பேருக்கும், ஹாசனில் 146 பேருக்கும், சிக்கமகளூருவில் 93 பேருக்கும், யாதகிரியில் 102 பேருக்கும், ராமநகரில் 96 பேருக்கும், ஹாவேரியில் 36 பேருக்கும், கதக்கில் 78 பேருக்கும், சிவமொக்காவில் 189 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

86 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 86 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 17 பேரும், மைசூருவில் 11 பேரும், தார்வார், தட்சிண கன்னடாவில் தலா 9 பேரும், கலபுரகி, பெலகாவி, தாவணகெரேயில் தலா 4 பேரும், கொப்பல், ஹாசன், சிக்கமகளூரு, ஹாவேரியில் தலா 3 பேரும், விஜயாப்புரா, மண்டியா, ராய்ச்சூர், கதக், பீதர், சிக்பள்ளாப்பூரில் தலா 2 பேரும், கலபுரகி, பாகல்கோட்டை, துமகூரு, சாம்ராஜ்நகரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூருவில் மட்டும் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 38 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 1,293 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story