குட்டையில் பிணமாக மிதந்த 2 கல்லூரி மாணவர்கள் கொலையா? போலீசார் விசாரணை


குட்டையில் பிணமாக மிதந்த 2 கல்லூரி மாணவர்கள் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2020 4:48 PM GMT (Updated: 12 Aug 2020 4:48 PM GMT)

அரக்கோணம் அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் குட்டையில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அகன்நகர் அருகே டிபென்ஸ் காலனி பகுதியில் உள்ள குட்டையில் 2 வாலிபர்கள் பிணமாக மிதப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் மிதந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டனர். அதில் ஒரு உடல் உள்ளாடையுடனும், மற்றொரு உடல் பேண்ட், சட்டையுடனும் இருந்தது. போலீசார் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள்

இதில், குட்டையில் பிணமாக கிடந்தவர்களில் ஒருவர் அரக்கோணம் அகன் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் ஹரிஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர் சென்னை, செங்குன்றம் பகுதியில் உள்ள கல்லூரியில் விமான பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். மற்றொரு வாலிபர் அரக்கோணம், கிருஷ்ணாம்பேட்டை 3-வது தெருவை சேர்ந்த தேவகன் என்பவரின் மகன் அலெக்சாண்டர் (23). இவர் சென்னை அண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்கள் 2 பேரும் 10 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்து உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வாலிபர்கள் வீட்டில் இருந்து வந்துள்ளனர். மேலும் இறந்த வாலிபர்கள் உடலில் எந்த காயமும் இல்லை. ஹரிஸ் வைத்திருந்த கிரெடிட், டெபிட் கார்டுகள், 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போய் உள்ளது. வாலிபர்கள் உடல் கிடந்த குட்டை அருகே ஒரு சட்டை மட்டும் கிடந்துள்ளது.

கொலையா? போலீஸ் விசாரணை

வாலிபர்கள் குட்டையில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார்களா? அல்லது யாராவது கொலை செய்து உடலை குட்டையில் போட்டு விட்டு அவர்கள் வைத்திருந்த பொருட்களை திருடி சென்று இருப்பார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரக்கோணம், அகன் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story