தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் 119 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 11:42 PM GMT (Updated: 13 Aug 2020 11:42 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 65 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,549 ஆண்கள், 2,286 பெண்கள் என மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 236 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 741 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், செங்கல்பட்டில் 453 பேரும், திருவள்ளூரில் 390 பேரும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரியில் 9 பேரும், நீலகிரியில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 33 லட்சத்து 75 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 226 ஆண்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 100 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 15 ஆயிரத்து 614 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 40 ஆயிரத்து 274 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

119 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 81 பேரும், தனியார் மருத்துவமனையில் 38 பேரும் என 119 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 18 பேரும், செங்கல்பட்டு, கோவை, நெல்லையில் தலா 7 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரியில் தலா 6 பேரும், கடலூர், மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருவண்ணாமலையில் தலா 5 பேரும், திருவள்ளூர், தென்காசி, புதுக்கோட்டையில் தலா 4 பேரும், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும், விருதுநகர், திருச்சி, ராணிப்பேட்டை, நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கலில் தலா இருவரும், அரியலூர், சிவகங்கை, திருப்பத்தூர், திருவாரூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 30 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 5,397 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு 100-ஐ கடந்துள்ளது.

5,146 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 146 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேரும், செங்கல்பட்டில் 488 பேரும், காஞ்சீபுரத்தில் 290 பேரும் அடங்குவர். இதுவரையில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 53 ஆயிரத்து 499 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 867 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 726 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 831 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேரும் என மொத்தம் 5 ஆயிரத்து 886 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் புதிதாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 61 அரசு நிறுவனங்கள், 73 தனியார் நிறுவனங்கள் என 134 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story