புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது


புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதி: நெல்லையில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Aug 2020 12:49 AM GMT (Updated: 14 Aug 2020 12:49 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 189 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. தூத்துக்குடியில் 2 பேர் உயிரிழந்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 5 ஆயிரத்து 465 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆகி உள்ளனர். நேற்று மட்டும் 214 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 112 பேரும், சித்த மருத்துவக்கல்லூரியில் இருந்து 30 பேரும், அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்து 30 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். மற்றவர்கள் அரசு சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றவர்கள். 1,541 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 106 பேர் இறந்துள்ளனர் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 2 ஆயிரத்து 152 பேர் குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். 1,419 பேர் தென்காசி அரசு ஆஸ்பத்திரி மற்றும் நெல்லை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 61 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடியில் 2 பேர் சாவு

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 730 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 150 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,498 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் ஏற்கனவே 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளனர். நேற்று தூத்துக்குடியை சேர்ந்த 47 வயது ஆண், கோவில்பட்டியை சேர்ந்த 68 வயது முதியவர் ஆகிய 2 பேர் கொரோனா பாதிப்பால் இறந்து உள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

Next Story