கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் டாக்டர்கள் தயார் மந்திரி தகவல்


கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் டாக்டர்கள் தயார் மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 Aug 2020 9:03 PM GMT (Updated: 14 Aug 2020 9:03 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் டாக்டர்கள் தயாராக இருப்பதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நமது நாடு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. இதன் காரணமாக தான் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், சமீபமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

எனவே கொரோனாவை கண்டு மக்கள் பீதி அடைய வேண்டாம்.

2 ஆயிரம் டாக்டர்கள் தயார்

கொரோனா நோய்க்கு சரியான சிகிச்சை பெற்றால் விரைவில் குணமடைந்து விடலாம். கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இன்னும் ஒரு வாரத்தில் புதிதாக 2 ஆயிரம் டாக்டர்கள் வருகைதர உள்ளனர். அவர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அவர்களும் பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர்.

மருத்துவ படிப்பு தொடர்பான இறுதி ஆண்டுக்கான முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக இருக்கிறது. அவ்வாறு முடிவுகள் வெளியான பின்பு புதிதாக தேர்ச்சி பெறும் 2 ஆயிரம் டாக்டர்களை கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் டாக்டர்கள், கொரோனா ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story