சேலம் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது


சேலம் மாவட்டத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 21 Aug 2020 1:38 AM GMT (Updated: 21 Aug 2020 1:38 AM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 295 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 359 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 218 பேர் பாதிக்கப்பட்டனர்.

7,123 பேர் பாதிப்பு

கெங்கவல்லியில் 43 பேர், ஆத்தூரில் 31 பேர், தலைவாசலில் 8 பேர், பேளூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், சேலம் ஒன்றியத்தில் 4 பேர், எடப்பாடி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, மேச்சேரி, சங்ககிரி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து சேலம் வந்த 3 பேர், கள்ளக்குறிச்சி, நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 123 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 159 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story