ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி நாளை மறுநாள் தி.மு.க. உண்ணாவிரதம்


ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி நாளை மறுநாள் தி.மு.க. உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 25 Aug 2020 5:05 AM GMT (Updated: 25 Aug 2020 5:05 AM GMT)

ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசனம் மற்றும் மருதூர் மேலகால், கீழகால் பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கோரி நாளை மறுநாள் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர், 


பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கடந்த 18-ந் தேதி அன்று திறந்த தண்ணீர் இன்னும் ஸ்ரீவைகுண்டம் வந்து சேரவில்லை. ஸ்ரீவைகுண்டம் வடகாலில் கொற்கைகுளம், ஆறுமுகமங்கலம்குளம், பேய்க்குளம், அகரம்குளம், பெட்டைக்குளம், பழையகாயல்குளம், குலையன்கரிசல்குளம், கோரம்பள்ளம்குளம், இதேபோல் தென்காலில் கடம்பாகுளம், ஆத்தூர் குளம், சேதுக்குவாய்த்தான்குளம், நாலுமாவடி வாய்க்கால்குளம், அம்மன்புரம் பெரியகுளம், கானம்குளம், சீனிமாவடிகுளம், நல்லூர் கீழகுளம், நல்லூர் மேலகுளம், ஆறுமுகநேரி கீழகுளம், வண்ணான்குளம், துலுக்கன்குளம், நத்தக்குளம், நாலாயிரமுடையார்குளம், ஆவுடையார்குளம், எல்லப்பநாயக்கன்குளம் பாசனத்திற்கும் மற்றும் மருதூர் மேல்கால், கீழக்கால் ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளம், பட்டர்குளம், செந்திலாம்பண்ணை, பேரூர்குளம், சிவகளைகுளம், பெருங்குளம், பத்மநாபமங்கலம், பாட்டக்குளம், பீக்கன்குளம், ரெங்கநாதன் புதுக்குளம், எசக்கன்குளம், கைலாசப்பேரி, தருமனேரி, நெடுங்குளம், நொச்சிகுளம், கீழபுதுக்குளம், முத்துமாலைகுளம், வெள்ளரிக்காயூரணி, தேமாங்குளம் பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்.

உண்ணாவிரத போராட்டம்

இதனால் கருகும் நிலையில் பொதி பருவத்தில் உள்ள வாழை மற்றும் வெற்றிலை பயிரை காப்பாற்றுவதற்கும், ஆடு, மாடு குடிநீர் தேவைக்கும், இதேப்போல் கிராம மக்களின் நிலத்தடி குடிநீர் பாதுகாப்பதற்கும் உதவும். பாபநாசம் அணையில் 109 அடி நீர் இருப்பு இருந்தும் இன்னும் ஒரு மாதத்தில் பருவமழை பொழிந்து அணையின் முழு கொள்ளளவை எட்டி வீணாக கடலில் கலப்பதை தவிர்க்க கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும். அனைத்து விவசாய சங்கத்தின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தி.மு.க பொறுப்பாளாராகிய எனது தலைமையில், அனைத்து விவசாய சங்கங்கள், விவசாயிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முக்காணி ரவுண்டானா காமராஜர் சிலை அருகே நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிக்கு மனு

ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மனு அனுப்பி உள்ளார்.

அதில், “ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளான மேலாத்தூர், சுகந்தலை, சாத்தான்குறிச்சி, புன்னக்காயல், சேர்ந்தபூமங்கலம், வடக்கு, தெற்கு ஆத்தூர், தலைவன்வடலி, ஆவரையூர் மற்றும் சுற்றியள்ள கிராமங்களில் அதிகமான மின்கம்பங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேலாத்தூரில் மின்மாற்றி அமைப்பதற்காக மின்கம்பிகள் இறக்கி 6 மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. எனவே உடனடியாக அப்பணிகளை தொடங்கவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

Next Story