கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு


கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு
x
தினத்தந்தி 2 Sep 2020 11:37 PM GMT (Updated: 2 Sep 2020 11:37 PM GMT)

கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாகமுன்னேறி வருவதாககவர்னர் வஜூபாய்வாலா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து கவர்னர் வஜூபாய் வாலா தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கவர்னர் வஜூபாய் வாலா பேசும்போது கூறியதாவது:-

கல்வித்துறையில் கர்நாடகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதிலும் தலைநகர் பெங்களூரு கல்வியின் குவிமையமாக திகழ்கிறது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் ஆராய்ச்சி வளர்ச்சியில் பெங்களூரு நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் பல்கலைக்கழகங்கள் பெரிய அளவில் சாதனை நிகழ்த்தும். அதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும். கர்நாடகம் உலக அளவில் போட்டி போடும் திறனை கொண்டுள்ளது. அதனால் துணைவேந்தர்கள் புதிய கல்வி கொள்கையை ஒரு சவாலாக எடுத்து பணியாற்ற வேண்டும். அடுத்து வரும் காலத்தில் உயர்கல்வித்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ உள்ளது.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

பணியாளர்கள் நியமனம்

இதில் அஸ்வத் நாராயண் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இதற்காக புதிய சட்டத்தை உருவாக்குவது மற்றும் இதர ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. இதற்காக ஒரு அறிக்கையை தயாரிக்கும் பணியில் தனிக்குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த குழு அறிக்கை வழங்கியதும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் பணிகள் தொடங்கும்.

கர்நாடகம் மட்டுமின்றி, நாட்டின் போக்கையே மாற்றக்கூடிய வல்லமை இந்த புதிய கல்வி கொள்கைக்கு உண்டு. இதில் கர்நாடகத்தின் பங்கு முக்கியமானது ஆகும். பணியாளர்கள் நியமனம் உள்பட அனைத்து வசதிகளும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்படும். உயர்கல்வியில் கொள்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்த அம்சங்களை மாநில அரசே வழங்கும். அதன் அடிப்படையில் துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட துணைவேந்தர்கள், புதிய கல்வி கொள்கையை சிறப்பான முறையில் அமல்படுத்த நிர்வாக, கல்வி மற்றும் நிதி தன்னாட்சி அதிகாரத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story