நாளை மறுநாள் முதல் ஈரோடு மார்க்கமாக 10 சிறப்பு ரெயில் இயக்கம் முன் ஏற்பாடுகள் தீவிரம்


நாளை மறுநாள் முதல் ஈரோடு மார்க்கமாக 10 சிறப்பு ரெயில் இயக்கம் முன் ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Sep 2020 11:46 PM GMT (Updated: 4 Sep 2020 11:46 PM GMT)

ஈரோடு மார்க்கமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 10 சிறப்பு ரெயில் இயக்கப்படுவதையொட்டி ரெயில் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ரெயில் சேவையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. தமிழகத்தில் பயணிகளின் நலன்கருதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகமானதால் சிறப்பு ரயில்களை ரத்து செய்யும்படி தமிழக அரசு, மத்திய அரசை கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி ஈரோடு ரெயில் நிலையம் மார்க்கமாக, கோவை -சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் -சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை கோவை எக்ஸ்பிரஸ், கோவை -மயிலாடுதுறை ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இயக்கபட உள்ளன. மேலும் மேற்கண்ட ரெயில் மறுமார்க்கமாகவும் இயக்கப்பட உள்ளதால் 10 சிறப்பு ரெயில்கள் ஈரோடு மார்க்கமாக வந்து செல்லும்.

முன்பதிவு

இதையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் முன் ஏற்பாடுகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. ரெயில் நிலைய வளாகம் மற்றும் பிளாட் பாரங்களில் ரெயில்வே ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு முன் ஏற்பாடு பணிகளை மேற்கொண்டனர். சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவுகள் இன்று (சனிக்கிழமை) தொடங்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதால் ரெயில் நிலையத்திற்குள் வரும் மற்றும் வெளியேறும் பயணிகளை சமூக இடைவெளி பின்பற்றும் வகையில் எந்தெந்த வழிகளில் அனுப்பி வைப்பது, டிக்கெட் கவுன்டர்களுக்கு வரும் பயணிகளிடையே எவ்வாறு சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Next Story