மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த தண்ணீர்


மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த தண்ணீர்
x
தினத்தந்தி 7 Sep 2020 12:28 AM GMT (Updated: 7 Sep 2020 12:28 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை பெய்வதால், பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதிகளில் உற்பத்தியாகின்ற கொட்டைஆறு, பாரப்பட்டிஆறு, வண்டிஆறு, குருமலைஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டிஆறு நீராதாரமாக உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும் போது ஆறுகளில் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் பஞ்சலிங்க அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது. வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தானாகவே கலந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் ஒருவித நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மனஅழுத்தமும் குறைந்து விடுகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல்மழையும் அவ்வப்போது பலத்தை மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைவதுமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் காலையில் குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மும்மூர்த்திகளை தரிசனம் செய்தனர். அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆனால் மாலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று, சப்தகன்னிமார் கோவிலை சூழ்ந்தவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. இதனால் அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியல்களை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு உண்டியல்களை கட்டியிருந்தனர். கோவிலை வெள்ளம் சூழ்ந்ததால் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

Next Story