மின்சார ரெயில்களை இயக்க வலியுறுத்தி விரார் ரெயில் நிலையம் முன் பயணிகள் போராட்டம்


மின்சார ரெயில்களை இயக்க வலியுறுத்தி விரார் ரெயில் நிலையம் முன் பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sep 2020 7:19 PM GMT (Updated: 7 Sep 2020 7:19 PM GMT)

மின்சார ரெயில்களை இயக்க வலியுறுத்தி விரார் ரெயில் நிலையம் முன் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மாா்ச் 23-ந் தேதி முதல் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதே நேரத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வசாய், விரார், பன்வெல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்சில் பயணம் செய்து மும்பைக்கு வேலைக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று விரார் ரெயில் நிலையம் முன் சுமார் 300 பேர் மின்சார ரெயில்களை இயக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பையில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஆவர். அவர்கள் பஸ்சில் மும்பைக்கு வேலைக்கு செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறினர்.

ரெயில்களை இயக்க வேண்டும்

மேலும் போராட்டம் குறித்து ஒருவர் கூறுகையில், “மும்பை - ஆமதாபாத் சாலையில் தகிசர் சுங்கச்சாவடி பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மும்பை செல்ல 4 மணி நேரம் ஆகிறது. இன்றும் (நேற்று) போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பஸ், பஸ் நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வரவில்லை. எனவே நாங்கள் ரெயில்களை இயக்க கோரி, ரெயில் நிலையம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்றார்.

இந்தநிலையில் அங்கு வந்த ரெயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்து கலைந்து போக வைத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று விரார் ரெயில் நிலையம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story