இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200 பயணிகள் நெல்லை வந்தனர் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளி மகிழ்ச்சி


இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200 பயணிகள் நெல்லை வந்தனர் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளி மகிழ்ச்சி
x
தினத்தந்தி 7 Sep 2020 10:48 PM GMT (Updated: 7 Sep 2020 10:48 PM GMT)

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 200 பயணிகள் நேற்று நெல்லை வந்தனர். இந்த ரெயிலில் சொந்த ஊர் திரும்பியதால் தொழிலாளி மகிழ்ச்சி அடைந்தார்.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. நாடு முழுவதும் ரெயில் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. தற்போது 8-வது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் திருச்சியில் இருந்து மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. ரெயிலில் பயணிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயணித்தனர்.

இந்த ரெயில் காலை 11.10 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்துக்கு வந்து சேர்ந்தது. ரெயிலில் இருந்து பயணிகள் வரிசையாக கீழே இறங்கினர். சிலர் கைக்குழந்தைகளுடன் வந்தனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

205 பயணிகள்

இந்த ரெயிலில் நேற்று மட்டும் 205 பயணிகள் நெல்லை வந்தனர். 6 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை தொடங்கியதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், ரெயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகளுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த தொழிலாளியான ராமச்சந்திரன் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் மதுரையில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் எனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இருந்தேன். ரெயில் மீண்டும் ஓடத்தொடங்கியதால், நான் குடும்பத்துடன் நெல்லை வந்து இருக்கிறேன். நாங்கள் சொந்த ஊர் திரும்பியதால் மகிழ்ச்சியாக உள்ளோம். படிப்படியாக ரெயில்வே நிர்வாகம் அனைத்து ரெயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல்வெப்ப பரிசோதனை

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் நெல்லையில் நின்று விட்டு நாகர்கோவிலை நோக்கி புறப்பட்டது. முன்னதாக இந்த ரெயில் மூலம் நாகர்கோவிலுக்கு செல்ல 3 பயணிகள் நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களுக்கு நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட நவீன உடல் வெப்ப எந்திரம் மூலம் பரிசோதனை செய்து கணினி கொண்டு கண்காணிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரெயிலில் ஏறி நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயில் நாளை (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வருகிறது. அதேபோல் நாளை (புதன்கிழமை) மாலையில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்லும்.

Next Story