கூட்டாம்புளியில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் மையம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


கூட்டாம்புளியில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் மையம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Sep 2020 12:00 AM GMT (Updated: 9 Sep 2020 12:00 AM GMT)

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழில் மையத்தை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளியில் தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் தொகுப்பு உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு கொரோனா நிதியுதவி வழங்குதல் மற்றும் தையல் தொழில் மையத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கூட்டாம்புளி தொழில் குழுவின் ரூ.2 லட்சம் மதிப்பில் ஆயத்த ஆடை தயாரிப்புக்கான தையல் தொழில் மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில் குழு என்பது தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஒரே வகையான தொழிலில் அல்லது செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஒரு அமைப்பு ஆகும்.

வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் குமாரகிரி ஊராட்சியில் 5 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் தையல் தொழில் குழுவுக்கு தூத்துக்குடி மாவட்ட ஊரக புத்தாக்க திட்ட சங்க செயற்குழுவின் ஒப்புதலின்படி தொழிற்குழுவிற்கு கோவிட்-19 சிறப்பு நிதி உதவி தொகுப்பில் மூலதன மானியமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த குழுவினர் ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையை அதிகப்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.

மேலும் குமாரகிரி பஞ்சாயத்தில் 463 உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் பெருந்தலைவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றுக்கு தூத்துக்குடி மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பில் இருந்து மூலதன மானியமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை பெற்று மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் ரேவதி, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் தூத்துக்குடி வட்டார திட்ட செயலர் மகேசுவரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த்தன், பொற்செழியன், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன்துரைமணி, துணைத்தலைவர் முப்பிளியன், பெருந்தலைவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் ராமச்சந்திரன், செயல் தலைவர் ஜெயகுமார், பொருளாளர் நட்டார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story