திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை


திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Sep 2020 6:24 AM GMT (Updated: 9 Sep 2020 6:24 AM GMT)

திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

திருச்சி,

திருச்சி காஜாமலை காலனியில் தமிழக அரசின் வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர்பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு உள்ள மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்துவதற்காக ரூ.29 லட்சம் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டு இருந்தது.

இந்த டெண்டருக்கான படிவங்களை 110 பேர் வாங்கி சென்றிருந்தனர். டெண்டர் பெட்டி செப்டம்பர் 8-ந்தேதி மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், திருச்சி மாவட்டத்தில் இருந்தும் வந்திருந்த ஏராளமான ஒப்பந்ததாரர்கள் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தின் முன் கூடி நின்றனர்.

அவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் நின்று கொண்டிருந்தனர். இதனால் கே.கே.நகர் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். வீட்டுவசதி வாரிய அலுவலகத்தின் 2 கேட்களும் இழுத்து மூடப்பட்டன. போலீசார் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் வெளியே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து குழு குழுவாக கூடிநின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லை என்றால் அவசர சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் ஒப்பந்ததாரர்கள் அதனை பொருட்படுத்தாமல் மாலை வரை அங்கேயே நின்று கொண்டிருந்தனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story