கருங்கல்பாளையம், பெரியசேமூரில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


கருங்கல்பாளையம், பெரியசேமூரில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sep 2020 11:47 PM GMT (Updated: 9 Sep 2020 11:47 PM GMT)

கருங்கல்பாளையம், பெரியசேமூரில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட தொடங்கின. அங்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.

ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறிய பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி முதல்கட்டமாக ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள மாநகராட்சி மகப்பேறு ஆஸ்பத்திரி, சூரம்பட்டிவலசு, பி.பி.அக்ரஹாரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 3 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த மையங்களில் பரிசோதனைக்கு தேவையான சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுகள் பெறப்படுகின்றன.

இதேபோல் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக 2 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கருங்கல்பாளையம், பெரியசேமூர் ஆகிய பகுதிகளில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டன. இவை நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாதிரிகள் சேகரிக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சிகிச்சை

குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் கருங்கல்பாளையம், பெரியசேமூர் ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. ஏற்கனவே ‘மிஷன் ஜீரோ’ திட்டத்தின் மூலம் நடமாடும் மருத்துவ குழுவினர் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்து வருகிறார்கள். இதில் காய்ச்சல், சளி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு இந்த மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மாநகராட்சி மண்டபத்தில் உள்ள முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு நோயாளிகளின் உடல் பரிசோதனை செய்யப்படும்.

அதில் மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்பட்டால் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். பாதிப்பு தன்மை குறைவாக இருந்தால், வீட்டில் தனி அறை வசதி இருக்கும் பட்சத்தில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறலாம். அந்த வசதி இல்லாமல் இருந்தால் மண்டபங்கள், பள்ளிக்கூடங்களில் உள்ள முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.

Next Story