கலபுரகியில் கோழிப்பண்ணையில் ரகசிய அறையில் பதுக்கிய ரூ.6 கோடி கஞ்சா சிக்கியது 4 பேர் கைது


கலபுரகியில் கோழிப்பண்ணையில் ரகசிய அறையில் பதுக்கிய ரூ.6 கோடி கஞ்சா சிக்கியது 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2020 8:49 PM GMT (Updated: 10 Sep 2020 8:49 PM GMT)

கலபுரகியில், கோழிப்பண்ணையில் ரகசிய அறை அமைத்து பதுக்கப்பட்ட ரூ.6 கோடி கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சமீப காலமாக கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட 204 கிலோ கஞ்சா, கஞ்சாவை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.

இதற்கிடையே போதை பொருட்கள் பயன்படுத்தியதாக கன்னடத்தில் பிரபல நடிகைகளான சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ரகசிய அறையில் பதுக்கல்

இந்த நிலையில் பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்த ஞானசேகர் (வயது 37) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த சிதுநாத கங்காதரா (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, கலபுரகி அருகே கமலாபுராவை சேர்ந்த நாகநாதா மற்றும் பீதரை சேர்ந்த சந்திரகாந்தா ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் 4 பேரும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, கலபுரகி மாவட்டம் கமலாபுரா அருகே லட்சுமணதாண்டா பகுதியில் சந்திரகாந்தாவுக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்தது தெரியவந்தது.

ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்

இதுகுறித்து சேஷாத்திரிபுரம் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைதான 2 பேரையும் கலபுரகிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்த சந்திரகாந்தா மற்றும் நாகநாதாவை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணையில் உள்ள ரகசிய அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த ரகசிய அறையில் மூட்டை, மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார், ரகசிய அறையில் இருந்த கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்துகொண்டனர். அவர்கள் 4 பேரும் ஒடிசாவில் இருந்து கஞ்சா மூட்டைகளை லாரியில் கொண்டு வந்து, ரகசிய அறையில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அந்த ரகசிய அறையில் இருந்து மொத்தம் 1,350 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். கைதான 4 பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் கமிஷனர் பாராட்டு

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளை போலீசார் பெங்களூருவுக்கு கொண்டு வந்தனர். பெங்களூருவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகளை நேற்று இரவு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பார்வையிட்டார். பின்னர் அவர், திறமையாக செயல்பட்டு பெரிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை பாராட்டியதுடன், அவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசும் வழங்கினார்.

கர்நாடகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கஞ்சா சிக்கி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story