கூடங்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் உள்பட 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


கூடங்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் உள்பட 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Sep 2020 11:30 PM GMT (Updated: 11 Sep 2020 11:30 PM GMT)

கூடங்குளம் அருகே நடந்த வாலிபர் கொலையில் நண்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே அடங்கார்குளத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் சுகந்தன் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10-ந்தேதி இரவில் கூடங்குளம் அருகே மேலசிவசுப்பிரமணியபுரத்தில் உள்ள தன்னுடைய நண்பரான முருகனின் (32) வீட்டுக்கு சென்றார். அங்கு சுகந்தனும், முருகனும் மது அருந்தியபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன் உருட்டு கட்டையால் சுகந்தனை தாக்கி, அவரது தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டதாக கூறப்படுகிறது. இதில் சுகந்தன் துடித்துடித்து இறந்தார். இந்த கொலை குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த கூடங்குளத்தைச் சேர்ந்த தங்கபெருமாள் மகன் சிங் (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான முருகன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

பணம்-கொடுக்கல் வாங்கல் பிரச்சினை

நானும், சுகந்தனும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்ததால், நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக சுகந்தன் என் மீதும், என்னுடைய தந்தையின் மீதும் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து எங்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், என்னுடைய தந்தையை கைது செய்தனர். பின்னர் நானும், சுகந்தனும் சமரசமாகி மீண்டும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தோம். எனினும் சுகந்தன் என்னுடைய தந்தையை சிறைக்கு அனுப்பியதால், அவர் மீது தீராத ஆத்திரத்தில் இருந்தேன்.

சம்பவத்தன்று சுகந்தனுடன் சேர்ந்து எனது வீட்டில் மது அருந்தினேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சுகந்தனை உருட்டுக்கட்டையால் தாக்கி, அவரது தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான முருகன், சிங் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story