குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்


குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் விக்கிரமராஜா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Sep 2020 1:07 AM GMT (Updated: 12 Sep 2020 1:07 AM GMT)

வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான மையங்களை திறப்பதற்கும் அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அங்கு 3 மாத காலம் தான் சீசன். இப்போது அங்கு குளிப்பதற்கும். தங்குவதற்கும் அனுமதி அளிக்கவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.

நியாயமான வாடகை

குற்றாலத்தில் கடை வாடகை என்பது 456 விதியின்படி செயல்படுத்த வேண்டும். சில அதிகாரிகள் 70, 80 சதவீதம் என தான்தோன்றித்தனமாக வாடகையை உயர்த்தி, வியாபாரிகளை பாதிக்கும் உள்நோக்கத்தோடு, அரசை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுவதாக நாங்கள் அறிகிறோம். எனவே, நியாயமான வாடகை விகிதத்தை செலுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதேபோல் பாளையங்கோட்டையில் 550-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் கடைகளை கொரோனா தொற்று காரணமாக அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் உள்ளே அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு நாங்கள் முறையான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால், அதை காரணம் காண்பித்து இதோடு இவர்களை காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் உடனடியாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

திரையரங்குகளை திறக்க அனுமதி

ஏற்கனவே எங்கள் வாழ்வுரிமை 6 மாத காலம் பறிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்படும். மீண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை கையில் எடுக்கக் கூடிய நிலை வந்து விடக்கூடாது என்பதை எச்சரிக்கை உணர்வுடன் பதிவு செய்கிறேன்.

தமிழகம் முழுவதும் அரசு விதித்த விதிகளின்படி திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களையும் திறந்தால் தான் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story