கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது


கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 12 Sep 2020 10:54 PM GMT (Updated: 12 Sep 2020 10:54 PM GMT)

புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்தும், குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது.

நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 792 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 455 பேர் குணமடைந்து உள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு லட்சத்தை நெருங்கியது

அதாவது புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சுல்தான்பேட்டையை சேர்ந்த 42 வயது ஆணும், கன்னியக்கோவிலை சேர்ந்த 71 வயது முதியவரும், ஜிப்மரில் புதுவை காமராஜ் நகர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த 61 வயது முதியவரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் ஊசுடு புதுநகரை சேர்ந்த 60 வயது முதியவரும் திருநள்ளாறு சுப்ராயபுரம் ரோட்டை சேர்ந்த 64 வயது முதியவரும் பலியானார்கள்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 95 ஆயிரத்து 919 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர்களில் 74 ஆயிரத்து 136 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

1.90 சதவீதம்

அவர்களில் 4 ஆயிரத்து 831 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,776 ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 55 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 370 பேர் இறந்துள்ளனர்.

அவர்களில் 316 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு 1.90 சதவீதமாகவும், குணமடைவது 73.24 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story