வட சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுக்க எண்ணூர் முகத்துவாரத்தில் செங்குத்தான சுவர்கள்- சென்னை ஐ.ஐ.டி. யோசனை


வட சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுக்க எண்ணூர் முகத்துவாரத்தில் செங்குத்தான சுவர்கள்- சென்னை ஐ.ஐ.டி. யோசனை
x
தினத்தந்தி 15 Sep 2020 12:15 AM GMT (Updated: 14 Sep 2020 9:56 PM GMT)

வட சென்னையில் வெள்ளப்பெருக்கை தடுக்க எண்ணூர் கடற்கரை முகத்துவாரத்தில் செங்குத்தான சுவர்கள் அமைக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. யோசனை தெரிவித்துள்ளது.

சென்னை, 

சென்னை ஐ.ஐ.டி. மழைக்காலங்களில் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை காமராஜர் துறைமுகத்தின் உதவியோடு, சென்னை ஐ.ஐ.டி. கடல் பயிற்சி துறையின் பேராசிரியர் கே.முரளி, பேராசிரியர்கள் எஸ்.ஏ.சன்னாசிராஜ் மற்றும் வி.சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், மிதமிஞ்சிய அளவில் புயலின் வேகம் ஆற்றில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதும், கடல் அலைகள் உயர எழும்பும் சூழலில் முகத்துவாரத்திலும், முகத்துவாரத்தின் மிகவும் குறுகலான பகுதிகளிலும் அதிக அளவில் தூர்கள் அடைத்துக் கொள்வதால் ஆற்றோர பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து நீரோட்டத்துக்கு எதிராக உண்டாகும் வெள்ளப்பெருக்கை கணிசமாக குறைக்க எண்ணூர் முகத்துவாரத்தில் ‘ஸ்ட்ரெய்ட் டிரெய்னிங்’ சுவர்களை எழுப்பலாம் என்று சென்னை ஐ.ஐ.டி. யோசனை தெரிவித்துள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள முகத்துவாரத்தில் சுவர்களை எழுப்பி, தூர் எடுப்பதின் மூலம் வெள்ளப்பெருக்கை கணிசமான அளவில் குறைக்க முடியும் என்று ஐ.ஐ.டி. சார்பில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் எஸ்.ஏ.சன்னாசிராஜ் கூறும்போது, “கடற்கரை ஓரத்தின் முனைப்பில் இருந்து முகத்துவாரத்தின் இரு புறங்களிலும் தண்ணீரில் 5 மீட்டர் ஆழம் வரை செங்குத்தான அளவில் இரட்டை ‘டிரெய்னிங்’ சுவர்களை கட்டுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது” என்றார்.



Next Story