காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு


காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 15 Sep 2020 1:32 AM GMT (Updated: 15 Sep 2020 1:32 AM GMT)

காவிரி ஆற்றின் உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பிவிட வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம் சித்தாம்பூர் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் தலைமையில் விவசாயிகள் நேற்று திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி கொடுந்துறை பாசன வாய்க்கால் வழியாக வரும் உபரிநீர் மழைக்காலங்களில் அய்யாற்றில் வீணாக செல்கிறது. அந்த உபரிநீர் செல்ல அய்யாற்றில் இருகரைக்கும் ஒரு சைமன் (கீப்போக்கி பாலம்) இருந்தது. அதில் அதிக அளவில் தண்ணீர் வந்து உடைந்து விட்டது.

எனவே, அய்யாற்றில் ஒரு சைமன் அமைத்து, காவிரி உபரிநீரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு சென்றால், சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.ஆகவே, வீணாக செல்லும் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மில் தொழிலாளர்கள்

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள கே.கள்ளிக்குடியில் தனியார் மில் செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கே.கள்ளிக்குடியில் இயங்கி வந்த தனியார் மில், நலிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது. அதை விற்று தனியார் நிறுவனம் ஒன்று, தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்களை கொடுப்பதாக உறுதி அளித்தது.

ஆனால், தற்போது அந்த மில்லும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. எனவே, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Next Story