மழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு கலெக்டர் ராமன் தகவல்


மழையின் போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2020 3:09 AM GMT (Updated: 16 Sep 2020 3:09 AM GMT)

மழையின்போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 23 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்காணித்திடவும், கிராமப் பகுதிகளை ஆய்வு செய்திடவும் துணை கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது வினியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும், போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு உபகரணங்களான பொக்லைன், ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தயார் நிலையில் மருந்துகள்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்தும் தொடர் கண்காணிப்பில் வைத்திட வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் வயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்திட வேண்டும். பொதுமக்கள் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் இருப்பின் அது தொடர்பான தகவல்களையும், மின்சாரம் செல்லும் மின்கம்பிகளுக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கும் மரக்கிளைகள் மற்றும் மின்சார கம்பிகளின் மீது உரசிய நிலையில் உள்ள மரக்கிளைகளை கண்டறிந்தால் உடனடியாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஏரிகள்

சேலம் மாவட்டத்தில் 455 ஏரிகள் உள்ளன. இவவற்றில் 15 ஏரிகள் நிரம்பி உள்ளன. நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் சரபங்கா வடிநில கோட்டத்தின் சார்பில் ரூ.6.77 கோடி மதிப்பீட்டில் 21 குடிமராமத்து பணிகளும், மேட்டூர் அணை கோட்டத்தின் சார்பில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் 7 குடிமராமத்து பணிகளும் என மொத்தம் ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் 28 குடிமராமத்து பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராமன் அதில் கூறியுள்ளார்.

Next Story