தஞ்சையில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா டெல்டாவில் 335 பேருக்கு தொற்று உறுதி


தஞ்சையில் மேலும் 3 பேரின் உயிரை பறித்த கொரோனா டெல்டாவில் 335 பேருக்கு தொற்று உறுதி
x

தஞ்சையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். டெல்டாவில் 335 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 90 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1019 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது ஆண், 65 வயது பெண் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 49 வயது ஆண் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 138 பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,784 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 65 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 732 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 72 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 471 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 71 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 152 பேர் நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 ஆயிரத்து 394 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வரை 1,006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story