மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 18 Sep 2020 3:20 AM GMT (Updated: 18 Sep 2020 3:20 AM GMT)

மகாளய அமாவாசையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் புரட்டாசி மாத பிறப்பு மற்றும் மகாளய அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது சாமிக்கு பல்வேறு பழங்கள் மற்றும் நறுமணப்பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் தர்மபுரி தாசஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி சாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மன்றோ குளக்கரை

தொப்பூர் கணவாய் பகுதியில் அமைந்துள்ள மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் சாமி கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சந்தனம், பன்னீர், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

இதேபோல் சோகத்தூர், வர்ணதீர்த்தம் ஆஞ்சநேயர் கோவில்கள், குப்புசெட்டிப்பட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றில் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், பன்னீர், இளநீர் மற்றும் விபூதியால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் துளசி வெற்றிலை மாலைகள் சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சஞ்சீவராயன் கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Next Story