ஊழியர்களுக்கு கொரோனா: ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம், வங்கி மூடல்


ஊழியர்களுக்கு கொரோனா: ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம், வங்கி மூடல்
x
தினத்தந்தி 18 Sep 2020 4:18 AM GMT (Updated: 18 Sep 2020 4:18 AM GMT)

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் அலுவலகம் அதன் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை எழுத்தருக்கு கொரோனா நோய் உறுதியாகி உள்ளது.

கடந்த 12-ந் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் கொரோனா நோய் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டு உள்ளார். இதில் தொற்று உறுதியானதை அடுத்து கோவில் நிர்வாக அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் கோவில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வங்கி மூடல்

இதேபோல் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் வெளி மாவட்டத்தை சேர்ந்த காசாளருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் நேற்று வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வருகிற 21-ந் தேதி மீண்டும் வங்கி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story