புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 20 Sep 2020 1:45 AM GMT (Updated: 20 Sep 2020 1:45 AM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பழமைவாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமணசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து, மலைமீது வீற்றிருக்கும் பெருமாளை மனமுருகி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கி வாழ்வில் சுபகாரியம் நிகழும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இந்த கோவிலில் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடப்பது வழக்கமாகும். தென் திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத திருவிழா விமரிசையாக நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அந்த கோவிலில் பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். புரட்டாசி சனிக் கிழமையில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனிபகவானால் ஏற்படக்கூடிய வீரியம் குறையும் என்பது ஐதீகம்.

சாமி தரிசனம்

நேற்று காலை முதலே தாந்தோன்றிமலை கோவிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடந்ததும், கொரோனா பரவலை தடுக்க நுழைவுவாயிலில் வைக்கப்பட்ட சானிடைசரில் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து பக்தர்களும் முக கவசம் அணிந்திருந்தனர்.

பக்தர்கள் கோவிலுக்குள் பூ, மாலை, துளசி உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் ஒவ்வொருவராக சென்று பெருமாளை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். மேலும் கரூர் நகராட்சி சார்பில் கோவிலை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க இந்தாண்டு கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலமேகப்பெருமாள்

குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இக்கோவிலில் உள்ள மூலவர் முதல் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதுபோல கோவிலில் உள்ள கண்ணாடி அறையில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் குளித்தலையில் உள்ள லெட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்பட குளித்தலையை சுற்றியுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

வரதராஜ பெருமாள்

புன்செய்தோட்டக்குறிச்சி அருகே உள்ள ஒரத்தை சேங்கல்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பெருமாளுக்கு புனிதநீரால் நீராற்றப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் துளசி மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

சீனிவாச பெருமாள் கோவில்

நொய்யல் அருகே கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் தீர்த்தக் குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தோகைமலை

தோகைமலையில் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, குங்குமம் மற்றும் துளசி உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story