புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 20 Sep 2020 3:06 AM GMT (Updated: 20 Sep 2020 3:06 AM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்படி கிருஷ்ணகிரி அருகே பிரசித்தி பெற்ற கணவாய்ப்பட்டி பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 1,200 பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டு, முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

ஓசூர்

ஓசூர் அருகே கோபசந்திரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சாமி கோவில், ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், சூளகிரி ஸ்ரீ வரதராஜ சுவாமி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் மலர் அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் பாகலூர் அருகே குடிசெட்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சாமி கோவில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள சிக்க திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தவாறும் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story