வத்தலக்குண்டுவில் கார்கள் மோதிய விவகாரம்: இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்


வத்தலக்குண்டுவில் கார்கள் மோதிய விவகாரம்: இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Sep 2020 3:06 AM GMT (Updated: 21 Sep 2020 3:06 AM GMT)

வத்தலக்குண்டுவில் கார்கள் மோதிய விவகாரம்: இந்திய தேசிய லீக் கட்சியினர் சாலை மறியல்.

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சுந்தரபாண்டி என்பவரின் காரும் இன்னொருவரின் காரும் மோதிக் கொண்டன. இதையடுத்து அவர்கள் 2 பேரும் நடுரோட்டில் நின்று வாய்த்தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே காரில் வந்த இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த அல் ஆசிக் என்பவர் வழி விட கூறினார். இதில் சுந்தரபாண்டிக்கும், அல் ஆசிக்கிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த சமயத்தில் அல் ஆசிக்குடன் காரில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த தாரிக் (வயது 21), ஆரிப் (22), இர்பான் (22) ஆகியோர் சுந்தரபாண்டியை தாக்கியதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து சுந்தரபாண்டி வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த சுமார் 25 பேர் போலீஸ்நிலையம் முன்பு திரண்டு, பொய் வழக்கு போடும் போலீசை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டு சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு இரவு 9 மணியில் இருந்து 9.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர். அதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story