திருப்பூரில் கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பி கைது


திருப்பூரில் கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 21 Sep 2020 3:25 AM GMT (Updated: 21 Sep 2020 3:25 AM GMT)

திருப்பூர் போயம்பாளையம் அருகே கடையில் செல்போன் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த வடிவேல்நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வாலிபர்கள் 2 பேர் அவருடைய கடைக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் மனோஜ்குமாரிடம் செல்போன் வாங்க வந்துள்ளோம். நல்ல செல்போனை காட்டுங்கள் என்று கூறி உள்ளனர். இதையடுத்து மனோஜ்குமார் ஒரு செல்போனை எடுத்து 2 பேரில் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

அதை வாங்கி பார்த்து கொண்டிருந்த நபர் திடீரென செல்போனை எடுத்து கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். அவருடன் வந்த மற்றொரு வாலிபரும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோஜ்குமார் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் செல்போனை திருடிக் கொண்டு ஓடிய வாலிபர்கள் 2 பேரையும் விரட்டி சென்று பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அண்ணன்-தம்பி கைது

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டை அடுத்த சேர்பார்பட்டு கிராமம் வேப்பம்பட்டி வீதியை சேர்ந்த தமிழ்செல்வன் (22), சிவபிரகாஷ் (20) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் அண்ணன், தம்பி என்பதும், இருவரும் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், செல்போனை திருடி அதை விற்று, அதில் வரும் பணத்தில் மது வாங்கி குடிக்க திட்டமிட்டதாகவும் போலீசாரிடம் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்செல்வன், சிவபிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story