ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது


ஆயுதப்படை போலீஸ்காரர்கள் உள்பட 106 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 21 Sep 2020 6:14 AM GMT (Updated: 21 Sep 2020 6:14 AM GMT)

வேலூர் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 106 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,544 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர்,

வேலூர் ஆயுதப்படையில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில் 2 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்களின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரியும் 51 வயது நபருக்கு சளி, இருமல் அறிகுறி காணப்பட்டன. அவரின் சளிமாதிரி பரிசோதனையில் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. போலீஸ் நிலையத்தில் கொரோனா அறிகுறி காணப்படும் நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட உள்ளது. வேலூர் மாநகராட்சி 4-வது மண்டல தூய்மைப்பணி மேற்பார்வையாளருக்கு தொற்று உறுதியானது.

12,403 பேர் குணமடைந்துள்ளனர்

வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேலூரில் உள்ள விடுதியில் தங்கி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 14 பேருக்கும் தொற்று உறுதியானது. அனைவரும் அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் மற்றும் அவருடைய மகள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை பெண் டாக்டர், ஆட்டோ டிரைவர், பைனான்சியர், முடிதிருத்தும் தொழிலாளி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 12 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 55 பேர் என்று மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 106 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதுவரை வேலூர் மாவட்டத்தில் 13,544 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12,403 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story