கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 2:43 AM GMT (Updated: 22 Sep 2020 2:43 AM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 37,096 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 72,096 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் நேற்று அதிகாலை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தண்டோரா மூலம் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல், சத்திரம், ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார்கொட்டாய் மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Next Story