கிரிக்கெட் விளையாடியபோது 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு


கிரிக்கெட் விளையாடியபோது 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 3:24 AM GMT (Updated: 22 Sep 2020 3:24 AM GMT)

பல்லடம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது 100 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் லேசான காயத்துடன் உயிருடன் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான வில்வமரத்தோட்டத்தில் 100 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 15 அடிக்கு தண்ணீர் இருந்துள்ளது.

இதன் அருகே வாடகை வீட்டில் வசிக்கும் சேவியர் என்பவரது மகன் ஜோவித் (வயது 9). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடினான். கிரிக்கெட் பந்தை பிடிக்க சென்றபோது எதிர்பாராத வகையில் ஜோவித் 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளான். அப்போது கிணற்றில் ஓரத்தில் இருந்த செடிகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளான்.

சிறுவன் உயிருடன் மீட்பு

உடன் விளையாடிய நண்பர்கள் இதுகுறித்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அருகில் உள்ளவர்கள் வந்து சிறுவனை மீட்க முயன்றுள்ளனர் ஆனால் முடியவில்லை. உடனடியாக இதுபற்றி பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி தகவலறிந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி சிறுவன் ஜோவித்தை உயிருடன் மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் லேசான காயம் அடைந்த ஜோவித்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story