டாஸ்மாக் கடையில் கடத்தப்பட்ட காவலாளி: கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்


டாஸ்மாக் கடையில் கடத்தப்பட்ட காவலாளி: கை, கால்கள் கட்டப்பட்டு கிணற்றில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 22 Sep 2020 4:03 AM GMT (Updated: 22 Sep 2020 4:03 AM GMT)

வாடிப்பட்டி அருகே மதுபாட்டில்கள் கொள்ளை சம்பவத்தின்போது கடத்தப்பட்ட காவலாளி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கண்மாய் கரைக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன் தினம் இந்த கடையின் சுவரில் துளைபோட்டு 10 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இந்த சம்பவத்தின் போது அங்கு காவலுக்கு இருந்த கச்சைக்கட்டியை சேர்ந்த கணேசன் (வயது 55) என்பவர் மாயமானார். கொள்ளையர்களை கணேசன் அடையாளம் கண்டுகொண்டதால் அவரை கடத்திச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

பிணமாக கிடந்தார்

இதைத் தொடர்ந்து கணேசனை உறவினர்களும், போலீசாரும் பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந்தோப்புடன் கூடிய கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தலைப்பகுதி பாலிதீனால் ஒட்டப்பட்டும், துணியால் சுற்றப்பட்டும் இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கிய ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விசாரணை

தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கணேசனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுபாட்டில்களுக்காக காவலாளியை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறியல்

இந்த நிலையில் நேற்று மதியம் வாடிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு கணேசனின் உறவினர்களும், பொதுமக்களும் ஒன்று திரண்டு வந்து கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

அவர்களிடம் மாணிக்கம் எம்.எல்.ஏ., சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கிய ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின், தாசில்தார் பழனிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கடத்தப்பட்ட காவலாளி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story