புதிதாக 60 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது தென்காசியில் 3 பேர் பலி


புதிதாக 60 பேருக்கு தொற்று: தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது தென்காசியில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 23 Sep 2020 3:58 AM GMT (Updated: 23 Sep 2020 3:58 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தென்காசியில் 3 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

தென்காசி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக பரவி வந்த கொரோனா கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்தது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 ஆயிரத்து 121 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 775 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 122 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று அணுமின் நிலைய ஊழியர்கள் 5 பேர், 100 நாள் வேலைத்திட்டத்தில் முத்தூர் பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் உள்பட 91 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் பணியாற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 934 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 194 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் 8 பேர் உள்பட 54 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்தனர். மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 6 ஆயிரத்து 150 பேர் வீடு திரும்பி உள்ளனர். 636 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 129 பேர் இறந்துள்ளனர்.

Next Story