புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா மேலும் ஒருவர் சாவு


புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 24 Sep 2020 1:56 AM GMT (Updated: 24 Sep 2020 1:56 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,424 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்தவகையில், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,470 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்த புதுக்கோட்டையை சேர்ந்த 80 வயது முதியவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரிமளம்

அரிமளம் ஒன்றியத்தில், கடையக்குடி அருகே உள்ள கோவிந்தன் பட்டி கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள், மேல்நிலைபட்டி கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள், கரையபட்டி கிராமத்தை சேர்ந்த 42 வயது ஆண், செங்கீரை கிராமத்தை சேர்ந்த 60 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கே.புதுப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 20 பேருக்கும், அரிமளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 16 பேருக்கும், கடியாபட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10 பேருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களான சண்முகா நகரில் 63 வயது ஆண் மற்றும் 32 வயது பெண்ணுக்கும், கடியாவயலில் 59 வயது பெண்ணுக்கும், கீழப்புலவன்காட்டில் 42 வயது ஆணுக்கும், பாப்பாவயலில் 40 வயது ஆணுக்கும், பாலன் நகரில் 34 வயது பெண்ணுக்கும், ஆதனக்கோட்டையில் 65 வயது ஆண் ஆகிய 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம், இப்பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை 387 ஆக அதிகரித்தது. அவர்களில் குணம் அடைந்த 352 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மருத்துவ முகாம்

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜிமுகமது தலைமை தாங்கினார். இதில் அன்னவாசல் வட்டார நடமாடும் மருத்துவகுழு மருத்துவர் முருகேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கினர். உடல் வெப்ப நிலை, ரத்தம், சளி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் செய்யப்பட்டது.

Next Story