பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தஞ்சையில், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தஞ்சையில், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sep 2020 3:29 AM GMT (Updated: 24 Sep 2020 3:29 AM GMT)

பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு, தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையை கண்டித்தும் கொரோனா நிவாரணம் கோரியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணை செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச. நிர்வாகிகள் ரெங்கராஜ், கலியமூர்த்தி, ஏ.ஐ. டி.யூ.சி. சண்முகம், ஐ.என். டி.யூ.சி. சரவணன், சி.ஐ. டி.யூ.ராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறையை தனியார் மயமாக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

அனைத்து தொழிற்சங்கம்

இதே போல் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ. டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமை தாங்கினர். தொ.மு.ச. மாவட்ட தலைவர் சேவியர், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி. யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த குருசாமி, பாஸ்டின், ரவிச்சந்திரன், சேவையா, கோவிந்தராஜ், முத்துக்குமரன், வங்கி ஊழியர் சங்க தலைவர் அன்பழகன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கொரோனா நிவாரணம்

ஆர்ப்பாட்டத்தில் பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா காரணமாக வேலைநீக்கம், ஆட்குறைப்பு, சம்பளம் வழங்காமை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நல வாரிய பதிவு புதுப்பித்தல் நல உதவிகள் பெற புதிய பொருத்தமற்ற நடைமுறைகளை கைவிட்டு எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டதற்காக போடப்பட்ட வழக்குகளை திரும்ப பேற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிருமித்தொற்றில் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்ற பணியாளர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை முழுமையாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதே போல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், திலகர் திடல், சேவப்பநாயக்கன்வாரி, தற்காலிக பஸ் நிலையம், உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story