கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி: கர்ப்பிணிகள் உள்பட 183 பேருக்கு தொற்று உறுதி


கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி: கர்ப்பிணிகள் உள்பட 183 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Sep 2020 4:00 PM GMT (Updated: 24 Sep 2020 3:53 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 521 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 183 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடலூர், குமராட்சி, அண்ணாகிராமம் பகுதியை சேர்ந்த 4 கர்ப்பிணிகள், என்.எல்.சி.யை சேர்ந்த பிரசவித்த தாய், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 79 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 99 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 704 ஆக உயர்ந்தது. நேற்று 318 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இது வரை 16 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 200 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 4 பேர் பலியானார்கள். இதன் விவரம் வருமாறு:-

சிதம்பரத்தை சேர்ந்த 58 வயது ஆண், 81 வயது முதியவர் ஆகிய 2 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கடலூரை சேர்ந்த 62 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த 53 வயது ஆண் அங்குள்ள அரசு மருத்துவமனையிலும் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 1,845 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 216 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3271 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Next Story