கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் தவறவிட்ட பணம் போலீசில் ஒப்படைப்பு - சமையல் பாத்திர கடைக்காரரின் நேர்மைக்கு பாராட்டு


கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் தவறவிட்ட பணம் போலீசில் ஒப்படைப்பு - சமையல் பாத்திர கடைக்காரரின் நேர்மைக்கு பாராட்டு
x
தினத்தந்தி 24 Sep 2020 11:15 PM GMT (Updated: 24 Sep 2020 5:41 PM GMT)

கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த சமையல் பாத்திர கடைக்காரரின் நேர்மையை பொதுமக்கள் பாராட்டினர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள கூசாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் (வயது 70). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று கோவில்பட்டிக்கு வந்து, வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக்கொண்டு, மார்க்கெட்டுக்கு சென்றார்.

அங்கு காய்கறிகள் வாங்கிக்கொண்டு, தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காய்கறிகளின் மீது பணப்பையை வைத்திருந்தார்.

கோவில்பட்டி மெயின் ரோடு சத்தியபாமா தியேட்டர் சந்திப்பில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த பணப்பையை தவறி கீழே விழுந்து விட்டது. அந்த பையில்ரூ.5 ஆயிரத்து 200 இருந்தது.

இந்த நிலையில், தனது பணப்பை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சவுந்தரபாண்டியன், கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையே, கோவில்பட்டி ஜமீன் கோட்டை தெருவை சேர்ந்த சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் கடை நடத்தி வரும் பாலமுருகன் (59) என்பவர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் வந்தபோது பணப்பை கேட்பாரற்று கிடந்ததை பார்த்து அதை எடுத்தார். பின்னர் கோவில்பட்டி கிழக்கு போலீசில்ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பணப்பை சவுந்தரபாண்டியன் தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன், அந்த பணப்பையை சவுந்தரபாண்டியனிடம் ஒப்படைத்தார். ரோட்டில் கிடந்த பணப்பையை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பாலமுருகனின் நேர்மையை போலீசாரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

Next Story