மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2020 9:30 PM GMT (Updated: 24 Sep 2020 7:21 PM GMT)

மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

நெல்லை,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு அதிகம் இருக்க கூடாது.

மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்கள், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் பெற்று வருகிற 10.11.2020-க்குள்ளும், புதிதாக விண்ணப்பிக்கிறவர்கள் வருகிற 30.11.2020-க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது வங்கி கணக்கு விவரத்தையும் தவறாது குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வருகிற 15.11.2020-க்குள் இணையதளத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை வருகிற 15.12.2020-க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 30.1.2021-க்குள்ளும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story