சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிப்பு 7 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிப்பு 7 பேர் பலி
x
தினத்தந்தி 25 Sep 2020 4:54 AM GMT (Updated: 25 Sep 2020 4:54 AM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 311 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 168 பேர், பனமரத்துப்பட்டியில் 17 பேர், சங்ககிரியில் 14 பேர், சேலம் ஒன்றியத்தில் 12 பேர், ஓமலூர், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், அயோத்தியாப்பட்டணம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 9 பேர், வீரபாண்டியில் 8 பேர், எடப்பாடியில் 7 பேர், காடையாம்பட்டி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, மேட்டூர், கெங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கொளத்தூர், மேச்சேரி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், ஏற்காட்டில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை

மேலும் தர்மபுரியில் இருந்து சேலம் வந்த 4 பேர், நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 2 பேர், வேலூர், கிருஷ்ணகிரி, மதுரை, கள்ளக்குறிச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 692 ஆக உயர்ந்துள்ளது.

7 பேர் பலி

சேலம் குகை பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரும், செவ்வாய்பேட்டையை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர்கள் பரிதாபமாக இறந்தார். மேலும் கருங்கல்பட்டியை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி ஒருவரும், தாதம்பட்டியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர். இதேபோல் சேலத்தை சேர்ந்த 68, 65 வயதுடைய முதியவர்கள் 2 பேர் மற்றும் 70 வயதுடைய மூதாட்டி ஒருவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியானார்கள்.

Next Story