வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


வேலூரில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 26 Sep 2020 10:30 PM GMT (Updated: 26 Sep 2020 8:32 PM GMT)

வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

வேலூர், 

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் விவரம் வருமாறு:-

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 63). இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 21-ந் தேதி இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிறிதுநேரத்தில் சுந்தரம் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று கொரோனாவினால் பாதிக்கப்பட்ட காட்பாடி தாராபடவேடு பழனிநகரை சேர்ந்த கணேசன் (74) கடந்த 14-ந் தேதியும், திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளக்குட்டையை சேர்ந்த சந்திரசேகர் (70) என்பவர் கடந்த மாதம் 28-ந் தேதியும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதுகுறித்து வேலூர், திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களும் முழுபாதுகாப்புடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 30). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெகதீசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Next Story