சமயபுரம் மாரியம்மன் கோவில் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை


சமயபுரம் மாரியம்மன் கோவில் முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2020 12:05 PM GMT (Updated: 27 Sep 2020 12:05 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமயபுரம்,

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவிலுக்கு முன்பு நிறுத்திவிட்டு, கோவிலுக்குள் செல்கின்றனர்.

மேலும் பக்தர்கள் காலணிகளை பாதுகாப்பாக கழற்றி வைக்க கோவில் நிர்வாகம் சார்பில் காலணிகள் பாதுகாப்பு அறை ஒன்று தேருக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் தேரை சுற்றியும், கோவில் நுழைவு வாயில் முன்பும் ஏராளமானோர் கடைகளை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் காலணிகள் வைக்கும் இடம் எங்கு உள்ளது என்று தெரியாமலேயே உள்ளது.

அகற்ற கோரிக்கை

இதன் காரணமாக பக்தர்கள் தங்கள் காலணிகளை ஆங்காங்கே கழற்றி விட்டு செல்வதால், அவை திருடு போய் விடுகிறது. இதன் காரணமாக வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அந்தப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.

Next Story