ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நவம்பர் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாநில தலைவர் தகவல்


ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நவம்பர் 1-ந்தேதி ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மாநில தலைவர் தகவல்
x
தினத்தந்தி 28 Sep 2020 4:06 AM GMT (Updated: 28 Sep 2020 4:06 AM GMT)

திருப்பூர் ஆண்டிபாளையம், மாரியம்மன் கோவிலில் நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து நவம்பர் 1-ந் தேதி பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பெருமாநல்லூர்,

இந்து முன்னணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணை தலைவர் குறிஞ்சி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாத சக்தி

அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் இந்து விரோத அரசாங்கமாக உள்ளது. இந்துக்களை பற்றி கவலைப்படுவதில்லை. எதிர்க்க வேண்டும் என்கிற மனப்பான்மையின் காரணமாக மட்டுமே புதிய கல்வி கொள்கையை எதிர்க்கின்றனர். இந்தியை கட்டாயம் படித்தாக வேண்டும் என்று சொல்லவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களில் எவ்வித போராட்டமுமின்றி ‘நீட்’ தேர்வை எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் தி.மு.க. கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன.

‘நீட்’ தேர்வை எழுதியவர்கள் தேவை என்றே கருத்து தெரிவிக்கின்றனர். நீட் தேர்வை பற்றி கருத்து கூறிய நடிகர் சூர்யா நல்ல நடிகர். அவரது குடும்பம் நடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளது. நடிகை ஜோதிகா, அவரது சகோதரி ஆகியோர் நடிகர் சூர்யாவை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அவர்கள் பின்னால் பயங்கரவாத சக்தி இருப்பதாக இந்து முன்னணி கருதுகிறது. எனவே நடிகர் சூர்யா அதிலிருந்து விடுபட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ஆர்ப்பாட்டம்

இந்து கோவில் நிலங்களை அரசாங்கம், அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். திருப்பூர் ஆண்டிபாளையம், மாரியம்மன் கோயிலில் நிலம் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து நவம்பர் 1-ந்தேதி பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்துக்கள் விஷயங்களில் அரசாங்கம் நேர்மையாக நடக்க வேண்டும். தேர்தலில் இந்து முன்னணி போட்டியிடாது. தேர்தலில் யார் வெற்றி பெறுவது என இந்து முன்னணி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story