ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு


ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீர் அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 Sep 2020 10:40 PM GMT (Updated: 29 Sep 2020 10:40 PM GMT)

கர்நாடகத்தில் ஒரேநாளில் 10,453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5 லட்சத்து 82 ஆயிரத்து 458 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10,453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 92 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு நேற்று முன்தினம் வரை 8,641 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 136 பேர் இறந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,777 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை தான் இருந்தது. அதுபோல உயிரிழப்பும் 100-க்கு கீழ் தான் இருந்தது. ஆனால் நேற்று பாதிப்பு 10 ஆயிரத்தையும், உயிர்ப்பலி 100-ஐயும் தாண்டி சென்றது. இதன்மூலம் பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென அதிகரித்து உள்ளது.

பெங்களூருவில் 4,868 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 128 பேர், பல்லாரியில் 313 பேர், பெலகாவியில் 128 பேர், பெங்களூரு புறநகரில் 305 பேர், பெங்களூரு நகரில் 4,868 பேர், பீதரில் 70 பேர், சாம்ராஜ்நகரில் 122 பேர், சிக்பள்ளாப்பூரில் 141 பேர், சிக்கமகளூருவில் 177 பேர், சித்ரதுர்காவில் 186 பேர், தட்சிண கன்னடாவில் 362 பேர், தாவணகெரேயில் 288 பேர், தார்வாரில் 145 பேர், கதக்கில் 111 பேர், ஹாசனில் 475 பேர், ஹாவேரியில் 75 பேர், கலபுரகியில் 161 பேர், குடகில் 57 பேர், கோலாரில் 72 பேர், கொப்பலில் 143 பேர், மண்டியாவில் 259 பேர், மைசூருவில் 414 பேர், ராய்ச்சூரில் 100 பேர், ராமநகரில் 10 பேர், சிவமொக்காவில் 347 பேர், துமகூருவில் 297 பேர், உடுப்பியில் 319பேர், உத்தரகன்னடாவில் 125 பேர், விஜயாப்புராவில் 138 பேர், யாதகிரியில் 117 பேர் உள்ளனர்.

136 பேர் சாவு

கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் பெங்களூரு நகரில் 67 பேர், ஹாசனில் 10 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், மைசூருவில் 7 பேர், சிவமொக்காவில் 6 பேர், கொப்பலில் 5 பேர், தார்வாரில் 4 பேர், பெலகாவி, சித்ரதுர்கா, துமகூருவில் தலா 3 பேர், பல்லாரி, சாம்ராஜ்நகர், ஹாவேரி, கலபுரகி, குடகு, மண்டியா, உடுப்பியில் தலா 2 பேர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர், விஜயாப்புராவில் தலா ஒருவர் என 136 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 6,628 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரத்து 378 பேர் குணமடைந்து உள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 737 பேர் சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 815 பேர் உள்ளனர். நேற்று 87 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 48 லட்சத்து 6 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story