ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி மேலும் 126 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலி மேலும் 126 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 30 Sep 2020 5:39 PM GMT (Updated: 30 Sep 2020 5:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நேற்று புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மாநகர் பகுதியில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தபோதிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

முதியவர்கள் பலி

இதற்கிடையில் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 65 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் கடந்த 15-ந்தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் இறந்தார்.

மேலும் ஈரோடு நசியனூர் ரோடு சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த 23-ந்தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் 24-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.

88-ஆக உயர்வு

இதேபோல் ஈரோடு கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்த 62 வயது ஆணும், கோபி பகுதியை சேர்ந்த 75 வயது ஆணும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 26-ந்தேதி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்கள் 2 பேருக்கும் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 62 வயது ஆண் கடந்த 27-ந்தேதியும், 75 வயது முதியவர் நேற்று முன்தினமும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

126 பேருக்கு தொற்று

மேலும் நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் நேற்று மாவட்டம் முழுவதும் 133 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 454 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,100 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story