மனைவி, மாமியார் கொலை வழக்கு: வாலிபர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு


மனைவி, மாமியார் கொலை வழக்கு: வாலிபர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 6:00 AM GMT (Updated: 1 Oct 2020 6:00 AM GMT)

மனைவி, மாமியார் கொலை வழக்கில் வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருச்சி,

திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35) . இவருடைய மனைவி பவித்ரா (28). இவர்களது மகள் கனிஷ்கா (3) . பவித்ராவின் தாய் கலைச்செல்வி (45). சில நாட்களுக்கு முன்பு கலைச்செல்வி தனது மகள் பவித்ராவை பார்க்க பெரிய மிளகுபாறைக்கு வந்திருந்தார்.

கடந்த 24-ந் தேதி பவித்ராவும், அவரது தாய் கலைச்செல்வியும் பூட்டிய வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பவித்ராவின் கணவர் உலகநாதன் தான் தனது மனைவி மற்றும் மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உலகநாதனை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் 25-ந் தேதி கும்பகோணம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதற்கிடையே உலகநாதனின் நண்பர்கள் சர்மா, கமலஹாசன் ஆகியோரை பிடித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தினார்கள். மேலும், கொலைக்கான காரணம் கண்டறிய உலகநாதனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி மகளிர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, உலகநாதனிடம் 4 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் உலகநாதனை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “பவித்ரா அவரது உறவினர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதற்கு மாமியார் கலைச்செல்வியும் உடந்தையாக இருந்ததால் சம்பவத்தன்று இரவு இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்“ என்றனர்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும், பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். உலகநாதனை 4 நாள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க இருந்த நிலையில், ஒரே நாளில் விசாரணையை முடித்து அவரையும், அவரது நண்பர்கள் சர்மா, கமலஹாசன் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story