மைசூரு அரண்மனையில் 6 பீரங்கிகளுக்கு சிறப்பு பூஜை


மைசூரு அரண்மனையில் 6 பீரங்கிகளுக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 Oct 2020 9:49 PM GMT (Updated: 4 Oct 2020 9:49 PM GMT)

மைசூரு அரண்மனையில் 6 பீரங்கிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மைசூரு,

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தசரா விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அரண்மனை வளாகத்தில் மட்டும் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்க உள்ளது.

இதில் 5 யானைகள் மட்டும் பங்கேற்க உள்ளது. அந்த யானைகள் கடந்த 1-ந்தேதி மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டன. மறுநாள், அதாவது 2-ந்தேதி பாரம்பரிய முறைப்படி அந்த யானைகள் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. தற்போது அந்த யானைகள் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

பீரங்கிகளுக்கு சிறப்பு பூஜை

ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அந்த யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அதில் முக்கியமான ஒன்று யானைகள் முன்பு பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்வது. அதாவது, ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படும், வாணவேடிக்கை நிகழ்த்தப்படும். இதனால் அப்போது யானைகள் மிரளாமல் இருப்பதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படும்.

இந்த நிலையில் யானைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அரண்மனையில் உள்ள 6 பீரங்கிகள் நேற்று வெளியே எடுக்கப்பட்டன. அந்த பீரங்கிகள் சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் அரண்மனை வளாகத்தில் வைத்து அந்த பீரங்கிகளுக்கு விபூதி, மஞ்சள், குங்குமம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

மேலும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள யானைகள் நேற்று குளிப்பாட்டப்பட்டன. பின்னர் அவைகளுக்கு சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது.

Next Story