ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
x
தினத்தந்தி 5 Oct 2020 4:39 PM GMT (Updated: 5 Oct 2020 4:39 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும், மூதாட்டி ஒருவர் பலியானார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2-ந் தேதி புதிய உச்சமாக 198 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 149 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 395 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சி, கொடுமுடி, கவுந்தப்பாடி, சித்தோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூதாட்டி பலி

கொரோனாவுக்கு ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 92 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் பவானியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 26-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.

Next Story